ஐபிஎல் 5 தொடரில் தோல்விகளால் துவண்டு போயுள்ள புனே வாரியர்ஸ் அணி, தொடரின் அடுத்த சுற்றிற்கு முன்னேற முடியாமல் லீக் போட்டிகளும் வெளியேறுகிறது. யுவராஜ் சிங் இல்லாத நிலையில் கேப்டனாக செயல்பட்ட செளரவ் கங்குலியும், இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஐபிஎல் 5 தொடரில் துவக்கத்தில் 2 வெற்றிகளை பெற்ற புனே வாரியர்ஸ், அதன்பிறகு அடுத்தடுத்து தோல்விகளை பெற்று துவண்டு போயுள்ளது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதிய புனே வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 125 ரன்களில் சுருண்டது. எளிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
ஐபிஎல் 5 தொடரின் லீக் சுற்றில் இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்றுள்ள புனே வாரியர்ஸ் 4ல் மட்டுமே வெற்றிப் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெறும். இதனால் அடுத்துள்ள 3 போட்டிகளிலும் புனே வாரியர்ஸ் அணி வெற்றிப் பெற்றாலும், பிளே ஆப் சுற்றிற்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள டெக்கான் சார்ஜர்ஸ் ஏற்கனவே அடுத்த சுற்றிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த நிலையில், புனே வாரியர்ஸ் 2வது அணியாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
கங்குலியின் எதிர்காலம்:
புனே வாரியர்ஸ் கேப்டன் கங்குலி துவக்க வீரராகவும், மிடில் ஆடரிலும் களமிறங்கினாலும் தொடரின் துவக்கம் முதலே ரன்களை சேர்க்க திணறினார். இதனால் 13 போட்டிகளில் பங்கேற்ற கங்குலி மொத்தம் 261 ரன்களை மட்டுமே எடுத்தார். டுவென்டி20 போட்டிகளுக்கு ஏற்காத வகையில் 100.77 ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார். புனே வாரியர்ஸ் அணியில் உள்ள வீரர்களிலேயே மிகவும் குறைந்த ஸ்டிரைக் ரேட் கொண்டவர் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.
புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் இல்லாத நிலையில், அணியை வழிநடத்திய வந்த கங்குலி 39 வயதை கடந்தவர். வரும் ஜூலை 8ம் தேதி தனது 40வது பிறந்த நாளை கொண்டாட உள்ள கங்குலி, இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




0 comments:
Post a Comment