
பிரித்தானியாவில் உள்ள சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 ற்கும் அதிகமான போர்க்குற்றவாளிகள் அங்கு புகலிடம் தேடியுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி சன்‘ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்ற மோசமான கொடூரங்களை இழைத்துள்ள போதும் இவர்களை தமது சொந்த நாட்டுக்கு அனுப்ப முடியாதுள்ளது. ஐரோப்பாவின் மனித உரிமைச் சட்டங்களே அதற்குக் காரணம்.
இவ்வாறு லண்டனில் புகலிடம் தேடியுள்ள போர்க்குற்றவாளிகளில் இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈராக், ருவாண்டா, சியாராலியோன், சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்களாவர்.
கடந்த 18 மாதங்களில் இவ்வாறான 207 சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவின் எல்லை முகவரகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அவர்களில் 12 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
போர்க்குற்றவாளிகள் பிரித்தானியாவை பாதுகாப்பான புகலிடமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க, இன்னும் வலுவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று லண்டனைத் தளமாக கொண்ட அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளதாகவும் ‘தி சன்‘ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் போர்க்குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாட்டப்படும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 18 மாதங்களாகப் பணியாற்றியிருந்தார்.
இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக, இராஜதந்திர விலக்குரிமையை விலக்கிக் கொள்ளுமாறு பிரித்தானிய அரசிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதும், அதனை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment